ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், இன்று (14.10.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதார் அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, வங்கி கடனுதவி, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முட்புதர்கள் அகற்றுதல் வேண்டி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .பூபதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.