ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று (05.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதையும், ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4 பகுதியில் மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் வார்டு எண்.53, இரயில்வே காலனி உயர்நிலைப்பள்ளியில் மேற்கு பக்க கட்டிடத்தின் முதல் தளத்தில் ரூ.60.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியினையும்,
வார்டு எண்.56. ரங்கம்பாளையம் பகுதியில் ரூ.120.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியினையும், வைராபாளையம் குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.200.07 கோடி மதிப்பீட்டில் பெரும்பள்ளம் ஓடை தூர்வாரி பக்கசுவர்கள் பலப்படுத்தப்பட்டு வருவதையும்,
தொடர்ந்து. கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு 63 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பிச்சாண்டிபாளையம் ஊராட்சி சாலப்பாளையம் மேடு கிராமத்தில் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,
புதுப்பாளையம் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஊரக குடியிருப்புகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.55,000/- மதிப்பீட்டில் வீடு சீரமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் திசுவாழை பரப்பு விரிவாக்கம் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் 100 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புத்தூர்புதுப்பாளையம் பகுதியில் திரு.செ.சிதம்பரம் என்பவர் திசுவாழை பரப்பு விரிவாக்கத்தில் ரூ.75,00/- மதிப்பீட்டில் 2 ஹெக்டேர் பரப்பளவில் 6,200 கதளி ரக வாழை கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்ததை, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனீஷ், ஈரோடு மாநகர நல அலுவலர் மரு.கார்த்திகேயன், மாநகர பொறியாளர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமதி.விஜயலட்சுமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி.பிரியா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.