இன்று 12.10.2022 புதன்கிழமை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கொடுமுடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வின் போது ஆய்வகம், நோயாளிகள் படுக்கையறைகள், அவசர மருத்துவ பிரிவு, மருந்தகம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ள பகுதிகள் அனைத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கூறியது:
"தாலுக்கா மருத்துவனாக கொடுமுடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட போதும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளன என்றும், மொத்தம் ஆறு பொது மருத்துவர்கள், ஒரு பல் மருத்துவர், ஒரு சித்தா மருத்துவர் உட்பட எட்டு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு அடிக்கடி பணி மாற்றுதல் கொடுக்கப்படுவதால் அவர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும், இதனால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட முடிவதில்லை என்றும், எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார், ஆனால் எக்ஸ்ரே எடுக்கும் வசதி எக்ஸ்ரே மெஷின் கிடையாது என்றும் இதனால் ஏழை நோயாளிகள் வெளியில் காசு கொடுத்து எக்ஸ்ரே எடுத்து வரும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்றும் ஆய்வகங்களில் உள்ள மெஷின்கள் மற்றும் உபகரணங்கள் மிகவும் பழுதான நிலையில் உள்ளது மிஷின்கள் இயங்குவதில்லை அதே போல் விபத்து ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க முடிவதில்லை. இதனால் மக்கள் கரூர் மற்றும் ஈரோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்யக்கூடிய ஸ்கேன் மெஷின் இங்கு இயங்குவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்று பணம் கொடுத்து ஸ்கேன் எடுத்து வரும் நிலை உள்ளது.
மேலும் இங்கே பிரேத பரிசோதனைகள் முறையாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அடையாளம் தெரியாதவர் பிரேதங்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வசதி கொண்ட பிரீசர் பாக்ஸ் இந்த மருத்துவமனையில் இல்லாமல் ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட போதும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து செல்வது அவர்களுக்கான சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் இல்லாமல் இருப்பதும் பொதுமக்களிடையே பெருத்த கவலை உருவாக்கியுள்ளது" என்று சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்தி இந்த அனைத்து வசதிகளையும் பெற்று தருவதாகவும் கூறினார்கள். இந்த ஆய்வின்போது மருத்துவ அலுவலர் ரேவதி, மருத்துவர் பேபி, சித்த மருத்துவர் இந்துமதி, பல் மருத்துவர் கீதா மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.