தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புதுறை ஆணையகம் மற்றும் மீன்வளம் & மீனவர் நலத்துறை ஆணையகம் இணைந்து அனைத்து மீன் மார்க்கெட்டுகளிலும் மீன் வகைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்திருந்தது. அது சமயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடைபெற்ற வருகிறது.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன் மற்றும் அருண்குமார் மற்றும் மீன் வளத்துறை ஆய்வாளர் சசிகலா, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் 20 க்கும் மேற்பட்ட மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 4 கடைகளில் கெட்டுப்போன மீன்வகைகள் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்காக இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அது தொடர்பாக 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு முறைப்படி அழிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் கீழ் 55 நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேற்கண்ட 4 கடைகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்கவிக்னேஷ் அவர்கள் கூறுகையில் மீன்களை சுகாதரமான முறையில் சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் உள்ள இறைச்சி / மீன் கடைகளை ஆய்வு செய்து அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வு தொடரும் என்றும் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு Whatsapp No 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.