தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த இல்லம் நினைவகமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பெரியார் அண்ணா நினைவகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் தமிழ்நூல்கள், ஆங்கில நூல்கள் மற்றும் அன்பளிப்பு நூல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் அவர்களின் பத்திரிக்கை நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பணியாற்றிய போது அவருக்கு தமது இல்லத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள், தங்குவதற்கு இடம் அமைத்து கொடுத்திருந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் இருந்த காலத்தில் வாழ்ந்து வந்த அந்த இல்லமானது தந்தை பெரியார் நினைவு இல்லத்துடன் சேர்ந்தே உள்ளது. அந்த இல்லத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதுவதற்கு பயன்படுத்திய மேசை, நாற்காலி, அரிக்கேன்விளக்கு, அந்த வீட்டின் சமையற்கூடம் ஆகியவை அதே நிலையில் பாதுகாப்பாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும், செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (15.09.2024) தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என்., மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ம.சதீஷ்குமார், ஈரோடு மாநகராட்சி மண்டல குழுத்தலைவர்கள் பி.கே.பழனிசாமி, தண்டபாணி, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி. செ.கலைமாமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.