ஈரோடு மாநகராட்சி, பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில், தந்தை பெரியார் அவர்களின் 146-வது பிறந்த நாளையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் இன்று (17.09.2024) தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
"தொண்டு செய்து பழுத்த பழம்" எனப் போற்றப்பட்ட தந்தை பெரியார், தமிழ் நிலத்தில் பெரும் சமுதாயப் புரட்சி நிகழ்த்திய பெருந்தகையாளர் ஆவார். தீண்டாமை ஒழிப்பு, பெண் சுதந்திரம் மற்றும் சமஉரிமை, சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைவரும் சமமாக கருத வேண்டும் என்பது போன்ற பல்வேறு சமூக சீர்திருத்தங்களையும் ஏற்படுத்துவற்காகவே தனது வாழ்நாள் முழுவதும் அற்பணித்தவர் ஆவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த தந்தை பெரியார் அவர்களை சிறப்பிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அவர் பிறந்த இல்லத்தினை மாண்புமிகு முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அண்ணா நினைவகமாக மாற்றி, அவர்தம் வாழ்க்கை வரலாறு மற்றும் கருத்துக்களை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையினில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தார். மேலும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் (17.09.2024), தந்தை பெரியார் அவர்களின் 146-வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஈரோடு மாநகராட்சி, பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என்., மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ம.சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி.செ.கலைமாமணி, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.