ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் "உலக சுற்றுலா தினவிழா" 2024- ஐ முன்னிட்டு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மற்றும் அமைதி எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் அவர்கள் இன்று (27.09.2024) பரிசுகளை வழங்கினார்.
செப்டம்பர்-27ஆம் நாளினை உலக சுற்றுலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து ஆண்டுதோறும் ஒரு கருத்தினை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் உலக சுற்றுலா தின விழா 2024 -வை முன்னிட்டு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டு சுற்றுலா மடிப்பேடுகள் வழங்கப்பட்டது.
மேலும், சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ / மாணவிகளிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று பரிசுகளை வென்ற மாணவ / மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் அவர்கள் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட சுற்றுலா அலுவலர் க.பழனிச்சாமி, உதவி சுற்றுலா அலுவலர் மு. மணி, மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.