ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2024-2025 முதல் 2 (Chief Minister's Research Fellowship) ஆராய்ச்சி படிப்பு (Ph.D) மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ. 1,00,000/- வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,00,000/- பெற்றிட கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.
* முழுநேர / பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
* வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
* இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர / பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்கவேண்டும்.
* ரூ.1.00 இலட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் இத்தொகை முழுவதுமாக அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மூலம் நேரடியாக மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வங்கி கணக்கிற்கு ECS மூலமாக செலுத்தப்படும்.
* ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை/ தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், முழுநேர / பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிட சான்று (Nativity Certificate) முதலியவற்றை ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.