Type Here to Get Search Results !

காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு ஓடத்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பார்வையாளராக கலந்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், ஓடத்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், இன்று (02.10.2024) ஓடத்துறை ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் அவர்கள் தலைமையில், காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

கிராம சபை கூட்டமானது, ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா, குடியரசுதின விழா, மே தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் மற்றும் ஊராட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் மற்றும் சில முக்கியமான தினங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளான இன்று (02.10.2024) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கிராம சபை கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்களின் வரவு செலவு கணக்குகள், மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள் ஆகியவை பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு, மகளிர் திட்ட திறன் பயிற்சி, சமூக நலத்துறையின் சார்பில் இளவயது கர்ப்பம், இளவயது திருமணம், ஊட்டச்சத்து குறைபாடுகள், வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசனம், மண்ணுயிர் காப்போம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு, தொழு நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடமாடும் மருத்துவ வாகனம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பொதுமக்கள் கொசு உற்பத்தியை தடுக்க வீட்டின் சுற்றுப்புறத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை சுற்றியுள்ள பயன்படுத்தாத பொருட்களான பாட்டில், பிளாஸ்டிக்
கப், ஆட்டுக்கல், தேங்காய் சிரட்டை, டயர் போன்ற பொருட்களில் நீர் தேங்கி அந்நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் அப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க சிமெண்ட தொட்டி, குடிநீர் தேக்கும் பொருட்கள், கீழ் நிலை மற்றும் மேல் நிலை தொட்டிகளை வாரத்திற்கு ஒரு முறை பீளிச்சிங் பவுடர் அல்லது சாம்பல் கொண்டு சுத்தம் செய்து பின்னர் அதில் நீரை பிடித்து வைக்க வேண்டும். தண்ணீரில் கொசுப்புழு இருந்தால் அதை கீழே கொட்டிவிட்டு அந்த பாத்திரத்தை அல்லது தொட்டியை பீளிச்சிங் பவுடர் அல்லது சாம்பல் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். மேலும் பொது மக்கள் அனைவரும் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளை பாதுகாத்திடும் வகையில் இன்றைய தினம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது தொடர்பாக தெரியவந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் பயனடைந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 40,000 மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதுபோன்று பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கென சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10,000 மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இன்றைய கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் திட்ட பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது என தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஓடத்துறை ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய துய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து, காப்புரிமை மற்றும்
நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய மருந்து பெட்டகத்தினை வழங்கி, மகளிர்
சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஓடத்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு தொடர்பான உறுதிமொழியினையும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) வெங்கடேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.சண்முக வடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி.பூங்கோதை, மகளிர் திட்ட அலுவலர் திருமதி.பிரியா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.