ஈரோடு, பவானி சாலை, பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 13.10.2024 அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. காலை 9.00 மணிக்கு முன்பதிவு ஆரம்பமாகிறது. இப்போட்டியல் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று, ஆதார் அட்டை நகல் மற்றும் படிக்கும் பள்ளியிலிருந்து படிப்புச் சான்றுடன் முன்பதிவிற்கு வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
குரலிசைப் போட்டி, பரதநாட்டிய போட்டி, நாட்டுப்புற நடனப் போட்டி, ஓவியப்போட்டி நடைபெறும். குரலிசை போட்டியில், கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமுதாயப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிறமொழிப் பாடல்கள், குழுப் பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள். அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும். கிராமிய நடனப் போட்டியில், தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம், முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென்டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
பரதநாட்டியம் போட்டியில், பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம் முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென்டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள். அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
ஓவியப் போட்டியில், 40 x 30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், ஆயில் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும் பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் கோயம்புத்தூர் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 0422 2610290 அல்லது 99946 61754 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபல் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.