கைவினைப் பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள, பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான "தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்" தொன்மையான கலைகளை பாதுக்காப்பதோடு, கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் ஆண்டு முழுவதும் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி மற்றும் விற்பனை 01.08.2025 முதல் 16.08.2025 வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியினை, ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் துவக்கி வைத்தார்.
இது குறித்து மேலாளர் சிவசங்கர் அவர்கள் கூறுகையில், "இக்கண்காட்சியில், காகித கூழ் கிருஷ்ணர், களிமண் கிருஷ்ணர், பஞ்சலோகத்தலான கிருஷ்ணர், பித்தளை கிருஷ்ணர், மார்பில் பவுடரால் செய்யப்பட்ட கிருஷ்ணர், அலிகார் பித்தளை கிருஷ்ணர், நூக்கமர கிருஷ்ணர், சந்தனமர கிருஷ்ணர், கருப்பு மற்றும் வெண் உலோகத்திலான கிருஷ்ணர் சிலைகள், தஞ்சை ஓவியத்தில் கிருஷ்ணர், பஞ்சலோக கிருஷ்ணர் டாலர் போன்றவை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்தபட்சமாக ரூ.150/- முதல் ரூ 20,000/- வரையிலான கைவினை பொருட்கள் இடம்பெற்றுள்ளது", என தெரிவித்துள்ளார்.