Type Here to Get Search Results !

பெருந்துறை, திங்களுர் ஊராட்சி மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு...


ஈரோடு மாவட்டம் பெருந்துறை, திங்களுர் ஊராட்சி மற்றும்  பெத்தாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (03.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கந்தசாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திங்களுர் துணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளான சொத்து ஆவணங்கள், சான்றளிக்கப்பட்ட பிரதிகள், வில்லங்கச் சான்றிதழ்கள், இதர மற்றும் வைப்புத்தொகைப் பதிவுகள், விற்பனைப் பத்திரங்கள் உள்ளிட்ட கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு விரைவான சேவையினை வழங்கவும், அலுவலகத்தின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திங்களுர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தானியங்கி மழையளவு பதிவு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அதன் செயல்பாடுகள், அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மழைப்பொழிவின் அளவு, சராசரி குறித்தும் கேட்டறிந்தார். மேலும், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றுப்பண்ணையினை பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள நாற்று வகைகள், நாற்றுகளின் வளர்ச்சி, வழங்கப்படும் ஊட்டச்சத்து உரங்கள், அவற்றின் பராமரிப்பு ஆகிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நாற்றுப்பண்ணையில் பூவரசு, மலை வேம்பு, வேம்பு, புங்கன், புளி, கொடுக்காப்புளி உள்ளிட்ட 16 வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மழை காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்ட பணியாளர்களை கொண்டு ஏரி மற்றும் சாலையோரப் பகுதிகளில் நாற்றுகள் நடப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து, பெத்தாம்பாளைம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு உணவின் சுவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வுகளின் போது, துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.