Type Here to Get Search Results !

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.


ஈரோடு மாவட்டம், திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 06.12.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இன்று (04.12.2025) முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண், பெண், இருபாலர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 06.12.2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.


மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 285 க்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே, மேற்படி முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ ஐ.டி.ஐ /டிப்ளமோ/நர்சிங்/பார்மஸி/பொறியியல் ஆகிய பிரிவுகளில் பயின்று, கல்வி தகுதி பெற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம்.


மேற்கண்ட முகாமிற்கு வரும்பொழுது வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொண்டு தங்களுக்கேற்ற வேலைவாய்ப்பினை தேர்வு செய்து பயன்பெறலாம்.

இம்முகாமில் அமைக்கப்பட்ட அரங்குகள் மற்றும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஆகிய வசதிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர்  சிந்துஜா, உதவி இயக்குநர் (மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்)  ராதிகா உட்பட துறை சாாந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.