ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா அவர்கள், 29.08.2022. இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப்பெற்றுக் கொண்டார்..
August 29, 2022
0
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று
(29.08.2022) மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா
அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை
உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை,
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு,
காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை
வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
குறித்து மொத்தம் 168 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு
கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பெற்று உரிய
துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட
உத்தரவிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள்,
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும்
நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி
சந்திரா அவர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்
இணைத்தல் பணியினை முழுமையாக முடிக்கப்பட்ட மொடக்குறிச்சி சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட ஆனந்தம்பாளையம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
அம்மாபேட்டை, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிரம்மதேசம்,
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் மற்றும் கோபி
ஆகிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் 5 கிராம்
வெள்ளிக்காசுகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)
திரு.குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.இலாஹிஜான், மாவட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.மீனாட்சி,
வட்டாட்சியர் (தேர்தல்) திருமதி.சிவகாமி உட்பட அனைத்து துறை அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.