ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம், தாமரைப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் 29.11.2022 நேற்று கொடுமுடி ஒன்றிய அளவிலான ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உட்பட 20 பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசு அறிவித்த கலைத்திருவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பேச்சுப் போட்டி, நடன போட்டி, பாட்டுப் போட்டி, பறை இசைப் போட்டி உட்பட 80 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
போட்டி துவக்க விழாவிற்கு வந்தவர்களை கொடுமுடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கா.தேன்மொழி வரவேற்று பேசினார். தாமரைப்பாளையம் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஈ.ஞானாம்பாள், தாண்டாம்பாளையம் அரசு மேனிலை பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கொடுமுடி வட்டார கல்வி அலுவலர்கள் அ.முருகன், இரா.ஞானவேல், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் உட்பட மாணவ மாணவியர், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.