நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் சகுந்தலா என்பவர் தலைவராக உள்ளார். இந்நிலையில் அனுமதியில்லாத விவசாய நிலங்களில் முறைகேடாக பணம் பெற்று கொண்டு அனுமதி வழங்குவதாகவும், மத்திய அரசு இலவசமாக வழங்கும் குடிநீர் திட்டத்திற்கு பணம் வசூல் செய்வதாகவும், மகளிர் சுய உதவி குழுவினர் 20 பேருக்கு மாற்றாக 50 நபர்களுக்கு வருகை பதிவேடு செய்து பணம் கையாடல் செய்வதாகவும், கூறி தலைவர் சகுந்தலா, மற்றும் அவரது மகன் திமுக பேரூர் செயலாளர் கார்த்திக் ராஜ், செயல் அலுவலர் கிருஷ்ணவேனி ஆகியோர் மீது கவுன்சிலர்கள் குற்றம் சாட்டிய நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் நேற்று ஆலாம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவரும் அதிமுக பேரூர் செயலாளருமான செல்லதுரை மற்றும் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவரும் பேரூராட்சியை கவுன்சிலருமான தனசேகரன், அதிமுக கவுன்சிலர்களான பங்கஜம் லோகநாதன், கவிதா வாசுதேவன், சுலைக்கா பேகம், ஜாகீர், புஷ்ப ராஜா மற்றும் பேரூர் கழகத் துணைச் செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் அலமேடு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.