தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பிற்கு த. அமிர்த குமார், செ.பீட்டர் அந்தோணிசாமி ஆகியோர் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்களாகவும் மற்றும் வி. ராதாகிருஷ்ணன் மாநில இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்களான த.அமிர்த குமார்,
செ.பீட்டர் அந்தோணிசாமி ஆகியோர் மற்றும் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வி.ராதாகிருஷ்ணன் (மாநிலத்தலைவர் தமிழ்நாடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு) அவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
இரா.சீத்தாராமன் (தமிழ்நாடு நகராட்சி/ மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு) ஆகியோர் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் பொது கோரிக்கைகளை வழங்கி பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள் விவரம்:
1. 01.04.2003 தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
2. ஈட்டில் விடுப்பு ஒப்படைப்பு பணபலனை மீண்டும் வழங்கிட வேண்டும்.
3. ஏழாவது ஊதிய குழுவில் 21 மாத நிலுவைத் தொகையையும், ஏற்கனவே மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கிய அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கும் நிலுவையின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. அனைத்து துறைகளிலும் உள்ள தொகுப்பூதிய,மதிப்பூதிய மற்றும் புற ஆதார பணி நியமனங்களை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.
5. தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெற்று வரும் அனைவரையும் நிரந்தர பணியாளராக அறிவித்து, அவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
6.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அனைவரையும் அரசு பணியாளர்களாக அறிவித்து, அதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் -
என குறிப்பிடப்பட்டிருந்தது.