தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் சார்பில் 34-ம் ஆண்டு மாணவ - மாணவியர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா,
50 வது ஆண்டு மாநில சங்கம் பொன்விழா, இளைஞரணி துவக்கவிழா ஆகிய
முப்பெரும் விழா குப்பிச்சிபாளையத்தில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. நடராஜன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட தலைவர் எஸ். கனகராஜ் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
இதில் மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் பாவலர் மா கணபதி, மாநில பொருளாளர் மகேஷ் கண்ணன், மாநில இளைஞரணி தலைவர் எஸ் என் பழனி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மா அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாநிலத் தலைவர் டாக்டர் சேம. நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மழைக்காலத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக பொம்மை செய்யும் தொழிலாளர்களுக்கு மேலும் கூடுதலாக ரூபாய் 5000 வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மண்பாண்ட நலவாரிய தலைவர் மற்றும் உறுப்பினர் குழு அமைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுப்பது , தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்குவது போல் மண் பானையும் மண் அடுப்பும் இலவசமாக வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலாளர்களை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி கல்லூரி நமது மாவட்டத்தில் அமைக்க வேண்டும், தமிழக அரசு பாட புத்தகத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்களில் பயன்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு பிரிவினை சேர்க்க வேண்டுவது, குலாலர்சமுதாய மக்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அரசை வேண்டுவது மாவீரர் சாலிவாகனன் நினைவாக ஒரு மணி மண்டபமும் திருவுருவச் சிலையும் அமைத்து தர அரசை வேண்டுவது, தமிழ்நாடு மண் பாண்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் இதுநாள் வரை பதிவு செய்திட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய (சீலாவீல்) சக்கரம் இலவசமாக வழங்க தமிழக அரசு வேண்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் வீ.டி யுவராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.