கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் கோவை செல்லும் சாலையில் சக்திவேல் என்பவர் சக்தி மோட்டார் மற்றும் சக்தி ஏஜன்சிஸ் என்ற பெயரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை கடந்த 25 ஆண்டு காலமாக நடத்தி வருகிறார்.
இவரது கடையில் கடந்த 7 ம் தேதி கடைக்கு இருசக்கர வாகனத்திற்க்கு உதிரி பாகங்கள் கேட்டு சிகப்பு நிற சட்டை அணிந்த ஒருவர் சென்றுள்ளார், அப்போது மற்றொருவர் கடைக்கு வந்து பொருட்கள் கேக்கவே அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் அவர்களுக்கு உதிரி பாகங்களை எடுத்துக் கொண்டிருக்கும்போது சிகப்பு நிற சட்டை அணிந்திருந்த அந்த நபர் யாரும் பார்க்காத நேரத்தில் கடை முன்பு மேசையின் மீது வைத்திருந்த பேட்டரியை திருடி தன் அணிந்திருந்த ஆடையில் மறைத்து வைத்துள்ளார்.
இது குறித்து கடை உரிமையாளர் சக்திவேல் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த ஒருவர் உதிரி பாகத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், சக்திவேல் நம்பியூர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடையில் திருடிச் சென்ற நபரை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், சக்திவேலின் கடைக்கு சென்ற ஒருவர் இருசக்கர வாகனத்திற்கு டேங்க் கவர் வேண்டுமென கேட்டுள்ளார். அப்போது, கடை ஊழியர் டேங்க் கவர் எடுக்கச்சென்ற போது கடை முன்பு வைத்திருந்த பொருட்களை அந்த நபர் திருட முயற்சி செய்துள்ளார்.
இதை அறிந்த சக்திவேல் மற்றும் கடை ஊழியர் அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பதும், அவர் நம்பியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும், இதற்கு முன்பு கடந்த 7ம் தேதி அதே கடையில் பேட்டரி ஒன்றை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, கடை உரிமையாளர் சக்திவேல் அவரை பிடித்து நம்பியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். நம்பியூர் காவல் துறையினர் கணபதியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.