ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி ஊராட்சி பெரும்பள்ளம் ஓடைக்கரையில் இன்று (19.10.2024) அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் 1 கோடி பனைவிதைகள் நடும் திட்டத்தின் தொடர்ச்சியாக, 2000 பனைவிதைகள் நடும்பணியினை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை தொடர்ந்து பனை விதைகள் நடும் நெடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (19.10.2024) மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் கதிரம்பட்டி ஊராட்சி பெரும்பள்ளம் ஓடைக்கரையில் 2000 பனைவிதைகள் நடும்பணியினை தொடங்கி வைத்தார். பனை விதைகள் நடும் பணியானது கதிரம்பட்டி ஓடை முதல் நஞ்சனாபுரம் செல்லும் ஓடைக்கரை பகுதியில் நடைபெறுகிறது.
முன்னதாக, சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பச்சப்பாளி, சாணார்பாளையத்தில் பகுதிநேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை
வழங்கினார்.
சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் நடத்தும் முழு நேர நியாய விலை கடையான பேட்டைக்காடு நியாய விலை கடையில் 813 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது பச்சபாளி சாணார்பாளையம், கன்னிமாகாடு பகுதியில் உள்ள 167 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் பச்சப்பாளி பகுதி நேர நியாய விலை கடை வாடகை இன்றி இயங்க ஏதுவாக ஊர் பொதுமக்களின் பங்களிப்புடன் புதிய கட்டிடத்தில் துவங்கப்பட உள்ளது. இந்த பகுதி நேர நியாயவிலை கடையில் 167 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் நாராயணன், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) சு.மாதேஸ், கூட்டுறவு சார்பதிவாளர்கள் மு.பா.பாலாஜி, பழனிச்சாமி உட்பட கூட்டுறவு ஒன்றியப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிதிநிதிகள், நாட்டு நலப்பணி மற்றும் தேசிய சேவை திட்டம், ஈரோடு சட்டக் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.