ஈரோடு மாவட்டம், திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இன்று (19.10.2024) ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அவர்கள் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், இத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, அத்திட்டங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் பெரிதும் அன்பும் அக்கறையும் கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். புதுமைப்பெண் திட்டம் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவியர்கள் சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மாணவியர்களை போன்று மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்புதல்வன் திட்டத்தினையும் செயல்படுத்தி வருவதுடன், படித்து முடித்த மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்ற வகையிலும், அவர்களின் திறன் மேம்படும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டில் 50,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் வகையில், பல ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்த்து வந்துள்ளார்.
அதே போன்று, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, அங்கு பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் தேவைப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், விளையாட்டுத்துறையில் பிற மாநிலங்கள் பின்பற்றுகின்ற வகையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு மைதானம் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். கடந்த முறை ஈரோடு மாவட்டம் வருகை புரிந்த போது சோலார் பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு, இந்த இடத்தில் மைதானம் அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கேட்டறிந்து இங்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தெரிவித்து, சோலார் பேருந்து நிலையம் அருகே ஒரு மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தினையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.