ஈரோடு மாவட்டம், பளையபாளையத்தில் அமைந்துள்ள ராயல் எம்பஸி கூட்ட அரங்கில் (18.10.2024) இந்திய தொழில் கூட்டமைப்பு - ஈரோடு கிளை சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை குறித்து விளக்கினார். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர உள்ளிட்ட தொழில்களுக்கு நிலம் கிடைப்பதை உறுதி செய்தல், இப்பகுதியில் உள்ள தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் திறமையை மேம்படுத்துதல் மற்றும் திறம்பட கார்ப்பரேட் ஆளுகை முறையை நிறுவுதல் ஆகிய மூன்று அம்ச அணுகுமுறையில் செயல்பட்டு வருகிறது எனவும், மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட சேவைகள் துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொழில்துறையின் வளர்ச்சியில் குறிப்பாக புதிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தொழில் சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில், ஜவுளி, பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், இரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் துறைசார் சங்கங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த சுமார் 70 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.