ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2025 நடைபெறவுள்ளதை தொடர்ந்து, இன்று (23.01.2025) வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள், தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா அவர்கள் முன்னிலையில் தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறை பணி ஒதுக்கீடு செய்தார்.
98. ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் கூடுதலாக (ரிசர்வ்) சேர்த்து 284 முதன்மை அலுவலர்களும், 284 முதல் நிலை அலுவலர்களும், 284 இரண்டாம் நிலை அலுவலர்களும், 284 மூன்றாம் நிலை அலுவலர்களும், மேலும், 1200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு 58 நான்காம் நிலை அலுவலர்கள் என மொத்தம் 1194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். மேற்படி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட சுழற்சி முறை பணி ஒதுக்கீடு 12.01.2025 அன்று நடைபெற்று அவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 19.01.2025 அன்று வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (23.01.2025) ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இணையதளத்தின் மூலம் இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்தார். இந்த அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, இரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கலை மற்றம் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 27.01.2025 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் 98 ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மதுகுதுரத்துல்லா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.