உத்தம தியாகி ஐயா திரு. எம். ஏ. ஈஸ்வரன் அவர்களின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் இன்று (25.10.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
அவர்கள் தெரிவித்தாவது,
மாண்பமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, உத்தம தியாகி ஐயா திரு. எம். ஏ. ஈஸ்வரன் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. ஐயா அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கீழ்பவானி அணை அமைவதற்கும், கீழ் பவானி வாய்க்கால் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசனம் பெறுவதற்கும் முதல் காரணமாக திகழ்ந்தவர். எனவே அவர் மீது விவசாயிகள் மிகுந்த அன்பும், பாசமும் வைத்துள்ளார்கள். அதன் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அவரின் நினைவு என்றும் இருக்க வேண்டும் என்று பவானிசாகரில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டு, கடந்த 20.12.2024 அன்று திறந்து வைத்தார்கள். மேலும் அன்னாரது திருவுருச்சிலை பவானிசாகர் அணை பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஐயா அவர்கள் தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல் விவசாயிகள் முழுவதுமாக பயனடைய வேண்டும் என்று உன்னதமான நோக்கில் இத்திகைய திட்டம் அமைய காரணமாக இருந்த மாமனிதர் ஆவார். மேலும், சுதந்திர போராட்டத்திலும் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர் ஆவார் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், பவானிசாகர் பேரூராட்சி, பனை நாயக்கன்கோட்டை வாயக்கால் கரையோரப் பகுதியில் பனை மர விதை நடும் பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈ. பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. ஜி. வெங்கடாசலம் (அந்தியூர்), வி. சி, சந்திரகுமார் {ஈரோடு கிழக்கு), சத்தியமங்கலம் நகர் மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.