Type Here to Get Search Results !

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வுப் பேரணி துவக்கம்.........


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கந்தசாமி  அவர்கள் இன்று (17.12.2025) துவக்கி வைத்தார்.


தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக கொண்டாட வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்  17.12.2025 தொடங்கி 27.12.2025 வரை ஆட்சிமொழிச் சட்டம் வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தின் அரசுப் பணியாளர்களுக்கு கணினித்தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டம், கல்லூரி மாணவர்களுடன் பட்டிமன்றம், தமிழறிஞர்களிடையே ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.


அதன்படி, விழாவின் தொடக்க நாளான 17.12.2025, தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி பெருந்துறை சாலை குமலன்குட்டை வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் ஈரோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியோர் என மொத்தம் 450 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தொடர்ந்து, பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வு கிராமியப்பாடல், நடன நிகழ்ச்சி மற்றும் இசைக்குழு ஆகியவை நடைபெற்றன.  



மேலும், விழாவின் தொடர்ச்சியாக 17.12.2025 மதியம் சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முனைவர்.இரா.விஸ்வநாதன் அவர்கள் நடுவராக பங்கேற்கும், இன்றைய சூழலில் இளைஞர்களிடையே தமிழ்ப்பற்று வளர்ந்திருக்கிறதா? தளர்ந்திருக்கிறதா? என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே ஆட்சிமொழிப் பட்டிமன்றமும், 18.12.2025 நாளை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை, வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்திக் கலந்தாய்வுக் கூட்டமும், சம்பத்நகர், நவீன நூலகத்தில் 22.12.2025, 23.12.2025, 24.12.2025 ஆகிய நாள்களில் கணிணித்தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் கணிணித்தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்த பயிற்சியும், ஆட்சிமொழி சட்டம் வரலாறு, அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி, மொழி பெயர்ப்பும், கலைச்சொல்லாக்கமும் குறித்த பயிற்சியும், தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பும் மூன்று நாட்கள்  நடைபெறவுள்ளன.  ஆட்சி மொழிச்சட்ட வார விழா கடைசி நாள் நிகழ்வாக 27.12.2025 அன்று பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விளக்கக் கூட்டமும் நடைபெறவுள்ளன.


இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்  வே.ஜோதி, கல்லுாரி முதல்வர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.