Type Here to Get Search Results !

அரசு அலுவலகங்கள், சுகாதார நிலையம், வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சித்தலைவர்....


ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சை ஊத்துக்குளி, முத்துகவுண்டன்பாளையம், லக்காபுரம் மற்றும் 46-புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கந்தசாமி,  அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




முதலில், மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயல்பு தணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர், அலுவலக செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT பாதுகாப்பு அறை (Strong Room), மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்கான கைபேசி சாதனங்கள், அடையாள அட்டைகள், வழிகாட்டி கையேடுகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.




மேலும், ஆதார் e-சேவை மையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள், வருமானம், இருப்பிடம், சமூகச் சான்றிதழ்கள், பட்டா உள்ளிட்ட மின்னணு சேவைகள் விரைவாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். அதன்பின், தானியங்கி மழையளவு பதிவு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பதிவான மழையளவு குறித்தும் கேட்டறிந்தார்.



மொடக்குறிச்சி அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சித்தலைவர், மருத்துவப் பதிவேடுகள், மருந்து இருப்பு, கழிப்பறை, படுக்கை வசதிகள், சிகிச்சை நடைமுறை, மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சியில் VB-GRAM-G திட்டத்தின் கீழ் ரூ.1.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் லக்காபுரம் ஊராட்சிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் ரூ.5.15 லட்சம் மற்றும் ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் வளாக நாற்றுப்பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகளையும் ஆய்வு செய்து, அவற்றை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.




தொடர்ந்து, 46-புதூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டிடப் பணிகளை பார்வையிட்ட அவர், மீதமுள்ள பணிகளை திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.