Type Here to Get Search Results !

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு ...


சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முகாசிபிடாரியூர், பனியம்பள்ளி, அட்டவணை பிடாரியூர் மற்றும் அம்மாபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




முகாசிபிடாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் NABARD திட்டத்தின் கீழ் ரூ.89.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சமையலறை மற்றும் இருப்பு அறையை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தூய்மை, குடிநீர் வசதி மற்றும் உணவுப் பொருட்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.




மேலும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் நுண்ணுயிர் உரக்கூடம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையம் மற்றும் மண்புழு உர உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, உற்பத்தி முறை மற்றும் உரத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மரக்கன்றுகள் பிரித்தெடுக்கும் கூடத்தையும், 1,000 மரக்கன்றுகள் நடும் பணியையும் பார்வையிட்டார்.



பனியம்பள்ளியில் உள்ள உதயம் சிறப்புப் பள்ளி, அட்டவணை பிடாரியூரில் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தியாகி கொடிகாத்த குமரன் சிலை மற்றும் மணிமண்டபப் பணிகள், நடமாடும் நியாயவிலைக் கடை, சென்-கோப்-டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் அம்மாபாளையம் இ-சேவை மையம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின் நிறைவில், அம்மாபாளையம் இ-சேவை மையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நேரடிக் கடனுதவி ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.